
சென்னை: இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். கடைசி போட்டி என்ற அறிவிப்பு இல்லை, சக வீரர்களிடம் இருந்து கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை இல்லை, எதிரணியில் வீரர்களின் மரியாதை இல்லை.. சர்வ சாதாரணமாக ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னரான அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.
இப்படியொரு வீரர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடி இருந்தால், தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். ஆனால் பிசிசிஐ தரப்பில் இந்திய ஜாம்பவான்களுக்கு எப்போதும் கடைசி காலத்தில் உரிய மரியாதை அளிக்கப்பட்டதில்லை. சச்சின் டெண்டுல்கருக்கு மட்டுமே கடைசி டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்தி உரிய மரியாதையுடன் வழியனுப்பி வைத்தது.
மற்ற எந்த இந்திய வீரருக்கும் ஃபேர்வெல் போட்டியில் விளையாடுவதற்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் அணியை மீள் உருவாக்கம் செய்த கேப்டனான சவுரவ் கங்குலி தனது கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் விளையாடி ஓய்வை அறிவித்தார். கொல்கத்தாவின் இளவரசன் என்று கொண்டாடப்பட்ட கங்குலி, ஈடன் கார்டன்ஸில் கடைசி விளையாடி இருந்தால், வாழ்நாள் நினைவாக அந்த ஆட்டம் இருந்திருக்கும்.
இந்திய அணியின் ஜாம்பவான் ஸ்பின்னரான அனில் கும்ப்ளே ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென ஓய்வை அறிவித்து சென்றார். அவர் தனது கடைசி ஆட்டத்தை டெல்லி மைதானத்தில் விளையாடினார். ஐபிஎல் ஏலத்தில் அவர் பெயர் ஒலித்த போது, அவர் கர்நாடகா வீரர்.. வேறு யாருக்கும் கொடுக்க கூடாது என்று விஜய் மல்லையா சண்டை போட்டு ஆர்சிபி அணிக்கு கொண்டு வந்தார்.
ஐபிஎல் அணியில் அளிக்கப்பட்ட மரியாதை கூட அனில் கும்ப்ளே பிசிசிஐ நிர்வாகத்தால் அளிக்கப்படவில்லை. இதன்பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு பின் விவிஎஸ் லக்ஷமண் ஓய்வை அறிவித்திருந்தார். அடுத்த போட்டியில் இந்திய அணி ஐதராபாத் மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருந்தது.
பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் விவிஎஸ் லக்ஷ்மணிடம் பேசியிருந்தால், நிச்சயம் ஒரேயொரு போட்டியில் விளையாட சம்மதிக்க வைத்திருக்க முடியும். சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன் விவிஎஸ் லக்ஷ்மண் ஃபேர்வெல் டெஸ்டில் ஆடியிருப்பார். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடிய வீரருக்கு வெளிநாட்டில் ஃபேர்வெல் கொடுத்தது பிசிசிஐ. அதே கதைதான் ராகுல் டிராவிட்டுக்கும் நடந்தது.
அதேபோல் இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டனான தோனிக்கு உரிய வகையில் ஃபேர்வெல் போட்டியை அமைத்து கொடுக்கப்படவில்லை. இந்தியாவின் சேப்பாக்கம் மைதானத்திலோ அல்லது ராஞ்சி மைதானத்தில் ஒருநாள் தொடரை விளையாட வைத்து ஃபேர்வெல் கொடுத்திருக்கலாம்.
ஆனால் தோனியிடம் பிசிசிஐ எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. தற்போது அதே போன்ற சம்பவம் தான் அஸ்வினுக்கும் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே இந்திய அணியின் எதிர்கால திட்டம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வினிடம் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் பேசியிருக்க வேண்டும்.
அஸ்வினின் மனதில் ஓய்வு குறித்த எண்ணம் இருக்கிறதா என்ற அறிந்து கொண்ட பின், அதற்கேற்ப முடிவுகளை எடுத்திருக்கலாம். இங்கிலாந்து அணி நிர்வாகம் ஆண்டர்சனை ஓய்வு பெற வைப்பதற்கு மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியுடன் ஓய்வு பெறுகிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தார்.
அதேபோல் அஸ்வினின் ஓய்வு திட்டத்தை அறிந்து, அவருக்கான உரிய மரியாதையுடன் ஃபேர்வெல் டெஸ்ட் போட்டியை நடத்தியிருக்கலாம். மீண்டும் தோனியை போலவே அஸ்வினுக்கு ஐபிஎல் அணியே ஃபேர்வெல் நடத்தி வழியனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு பிசிசிஐ தள்ளியுள்ளது. இதனால் ரசிகர்கள் பிசிசிஐ தனது அணுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.