
மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய ஊடகத்தினரால் புதிய சர்ச்சை வெடித்து இருக்கிறது. அதன் காரணமாக ஒரு கண்காட்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்து இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் ஒரு போட்டி டிராவில் முடிந்தது. மற்ற இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில் நான்காவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஊடகத்தினரை சந்தித்தார். அப்போது ஆஸ்திரேலிய ஊடகத்தினரில் சிலர் அந்த சந்திப்பை புறக்கணித்தனர்.
ஜடேஜா ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் புறக்கணித்ததால் தாங்கள் அந்த சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். ஆனால், இதை இந்திய கிரிக்கெட் அணியின் ஊடக மேலாளரும், இந்திய அணியுடன் பயணம் செய்து இருக்கும் இந்திய ஊடகத்தினரும் மறுத்து இருக்கின்றனர்.
ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் ஜடேஜா பதில் அளித்தார் என அவர்கள் விளக்கம் அளித்து இருந்தனர். இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஊடகத்தினருக்கும், இந்திய ஊடகத்தினருக்கும் இடையே ஒரு கண்காட்சி டி20 போட்டி நடைபெற இருந்தது. மெல்போர்ன் மைதானத்தில் அந்தப் போட்டியை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு முடிவு செய்து இருந்தது.
ஆனால், அந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என இந்திய அணியின் ஊடக மேலாளர் விலகினார். அவரைத் தொடர்ந்து இந்திய ஊடகத்தினரும் அந்த போட்டியில் பங்கேற்க போவதில்லை என புறக்கணித்து இருக்கின்றனர். இதை அடுத்து அந்த கண்காட்சி போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
ஆஸ்திரேலிய ஊடகத்தினர் ரவீந்திர ஜடேஜா மீது பழி சுமத்தியதால்தான் இந்திய ஊடகத்தினர் அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் நடந்து கொண்டிருப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கொண்டவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் எளிதாக பேச முடியாது என்ற அடிப்படையான விஷயத்தை கூட புரிந்து கொள்ளாமல் ஆஸ்திரேலிய ஊடகத்தினர் இந்திய வீரர்கள் மீது புகார் சொல்வது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.