
மும்பை: 2024 ஆம் ஆண்டு அர்ஷ்தீப் சிங்கிற்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்தது. இந்திய டி20 அணியின் நம்பர் 1 பந்து வீச்சாளராக அவர் மாறி இருக்கிறார். அவரது சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றதை மறக்க முடியாது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 18 டி20 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டு அவரது பவுலிங் சராசரி 13.5 ஆகும். இது மிகச்சிறந்த பந்துவீச்சு செயல்பாடாகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என்ற பெயரையும் அர்ஷ்தீப் சிங் பெற்று இருக்கிறார்.
அவர் இதுவரை இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மிக விரைவாக இத்தனை விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளை பொறுத்தவரை அவர் பும்ராவுக்கு இணையாக சிறப்பாக செயல்பட்டு வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் இந்திய டி20 அணியின் சிறந்த வீரர் யார்? என்று கேட்டால் நிச்சயமாக அர்ஷ்தீப் சிங் பெயரை கூறலாம். அவர் அடுத்து இந்திய ஒருநாள் அணியிலும் இடம் பெற்று வருகிறார். இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
படிப்படியாக அவர் இந்திய ஒரு நாள் அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கலாம். 2024 ஐபிஎல் தொடரிலும் அவருக்கு பெரும் தொகை கிடைத்தது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை 18 கோடி கொடுத்து வாங்கியது.