
இந்தியா மற்றும் சீனா இடையே சமீபத்தில் பல உயர்நிலை சந்திப்புகள் நடந்தன. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இந்தப் பதற்றம் எங்கிருந்து தொடங்கியதோ, அந்த எல்லைப் பிரச்னையின் தற்போதைய நிலை என்ன?
அதாவது, இரு நாடுகளுக்கு இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இப்போது என்ன நடக்கிறது?
குறிப்பாக லடாக்கில் என்ன நடக்கிறது? அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதா? இந்த சந்திப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இன்னும் தெளிவாகாத கேள்விகள் யாவை?
சீன வெளியுறவு அமைச்சருடன் தோவல் சந்திப்பு
டிசம்பர் 18 அன்று, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அவர்கள் இருவரும் இந்தியா மற்றும் சீனாவின் சிறப்புப் பிரதிநிதிகளாக சந்தித்தனர். இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் எல்லை பிரச்னைகள் தொடர்பானது.
கடந்த 2020-ஆம் ஆண்டு லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்ததில் இருந்து, முக்கியத்துவம் வாய்ந்த உயர்நிலை பேச்சுவார்த்தை நடைபெறுவது இதுவே முதல்முறை.
இந்தச் சந்திப்புக்கு முன் பல முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக, இந்த ஆண்டு அக்டோபர் 23 அன்று, ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்தனர்.
அதுதவிர இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கும் இடையே பல சந்திப்புகள் நடந்துள்ளன.
ஜூன் 2020 முதல், இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சக மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இடையே 38 சந்திப்புகள் நடந்துள்ளன.
இந்த சந்திப்புகளுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்ன?
கடந்த 2020ஆம் ஆண்டு எல்லையில் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதிகள் தொடர்பான ‘தீர்வை’ சீன வெளியுறவு அமைச்சகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
அடிப்படையில், அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கியப் புள்ளி, கிழக்கு லடாக்கின் பல எல்லைப் பகுதிகளுடன் தொடர்புடையவை.
இந்த ஆண்டு அக்டோபரில் டெப்சாங் மற்றும் டெம்சோக் குறித்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
செப்டம்பர் 2022இல் இரு படைகளும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து பின்வாங்கின. அதற்கு முன், 2021இல் கோக்ரா மற்றும் பாங்காங் ஏரி தொடர்பாகவும் தீர்வு எட்டப்பட்டது