
தமிழின் முன்னணி ஊடக குழுமங்களில் ஒன்றான விகடன் குழுமத்தின் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
விகடன் குழுமத்தின் இணைய தளமான விகடன்.காம்-ஐ சனிக்கிழமை இரவிலிருந்து வாசகர்கள் பலரால் அணுக முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிறுவனத்தின் செயலியும் பெரும்பாலான செல்போன்களில் செயல்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பாக அந்தக் குழுமம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து வெளியிட்ட ஒரு கார்ட்டூன் தொடர்பாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையால் சனிக்கிழமையன்று மத்திய அரசுக்குப் புகார் அனுப்பப்பட்ட நிலையில், அன்று மாலையே அந்தத் தளம் செயல்படவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை தங்களுக்கு முறையான அறிவிப்பு ஏதும் வரவில்லையென விகடன் குழுமம் தெரிவித்துள்ளது.
ஆனால், அமெரிக்கா சென்ற பிரதமரைப் பற்றி இப்படி கார்ட்டூன் வெளியிட்டது தண்டிக்கப்பட வேண்டிய செயல்தானே என்கிறார் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? விகடன் தரப்பு கூறுவது என்ன? இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதா?